டிரைவர் தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த தலைமை காவலர் நாராயணன் DSP .ராமநாதன் பாராட்டு

 

- Advertisement -

திருச்சி மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். அரசு பஸ் டிரைவரான இவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துவதற்காக, அவரது சகோதரரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மணப்பாறை பஸ் நிலையத்திற்கு வந்து பார்த்தபோது, பணம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கத்தில் தேடியும் பணம் கிடைக்காத நிலையில் இது தொடர்பாக மணப்பாறை போலீசில் புகார் அளிக்க சென்றார்.இதற்கிடையே பஸ் நிலையத்தில் ரூ.50 ஆயிரம் கிடந்ததை கண்டெடுத்த போக்குவரத்து தலைமைகாவலர் நாராயணன் அந்த பணத்தை எடுத்துச்சென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதையடுத்து மணப்பாறை துணை காவல்கண்காணிப்பாளர் DSP. திரு. ராமநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கோபி, கணேசன் மற்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து தலைமைகாவலர் நாராயணன் ஆகியோர் ராஜ்குமாரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனர். அவர் தலைமைகாவலர் நாராயணன் மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் நாராயணனை துணை காவல் கண்காணிப்பாளர். திரு.ராமநாதன் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.

சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.

Leave A Reply

Your email address will not be published.