திருச்சிமாநகர காவல்துறை சார்பாக மூத்தக்குடி மக்களுக்கான குறைதீர்ப்பு முகாம் காவல் ஆணையர் M.சத்யபிரியா IPS நேரடி விசாரணை

திருச்சிமாநகர காவல்துறை சார்பாக மூத்தக்குடி மக்களுக்கான குறைதீர்ப்பு முகாம் காவல் ஆணையர் M.சத்யபிரியா IPS நேரடிவிசாரணை.

திருச்சி மாநகர காவல்துறை சார்பாக காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்பேரில் மூத்த குடிமக்களின் அனைத்து குறைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ‘சிறப்பு பெட்டிஷன் மேளா” (Senior Citizen Petition Mela) நடைபெற்றது.

தமிழக காவல்துறை இயக்குநர் / காவல்படை தலைவர் DGP.அவர்களின் உத்தரவின்படி, திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா, IPS அவர்கள், பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் பல்வேறு மனுக்களின் மீது துரிதமாக விசாரணை மேற்கொண்டு குறைகளை களைய வேண்டும் என திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.

அதன்படி மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் தனிபிரிவில் இணையவழியில் முதல்வரின் முகவரிக்கு கொடுத்த மனுக்களுக்கும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் குறைதீர்க்கும் நாளில் கொடுத்த மனுக்களுக்கும், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறும் மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும், வாரந்தோறும் புதன்கிழமைகளில் மாநகர ஆயுதப்படையில் உள்ள திருமண மண்டபத்தில் காவல் ஆணையர் அவர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து, புகார் மனுக்கள் பெறப்பட்டு, மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை செய்து இருதரப்பினருக்கும் உள்ள பிரச்சனைகள் தீர்வு காணப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த வகையில் கடந்த ஆறு மாதங்களில் திருச்சி மாநகர பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவில் இணையவழியில் முதல்வரின் முகவரி மனுக்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் மனுக்கள், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் தினந்தோறும் நேரடியாக கொடுக்கப்பட்ட மனுக்கள் என சுமார் 2000 மனுக்களில் 1700 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதம் உள்ள மனுக்களின் மீது துரித விசாரணை செய்து, தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்தொடர்ச்சியாக மூத்த குடிமக்களின் (Senior Citizen) நலனை கருத்தில்க்கொண்டும், அவர்களது குறைகளை போக்கும் வகையிலும் ‘மூத்த குடிமக்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்” (Senior Citizen Petition Mela) நடத்திட திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில். 14.07.23-ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினிஹாலில் (கலைஞர் அறிவாலயம் அருகில்) நடைபெற்றது.

14.07.2023 தேதி நடைபெற்ற மூத்த குடிமக்களுக்கான சிறப்பு முகாமில் 99 மூத்த குடிமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். அவற்றில் முதியோர் உதவி தொகை முறையாக வரவில்லை (28) மனுக்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், திருச்சி மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வந்த 8 மனுக்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத்தவிர பெறப்பட்ட இதர மனுக்கள் அந்தந்த திருச்சி மாநகர காவல் சரக அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதர மனுக்களில் முக்கியமாக பணமோசடி மனுக்கள் (15), பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஆதரவற்ற முதியோர் மனுக்கள் (9), அண்டை வீட்டார் தொந்தரவு மனுக்கள் (7), வீட்டு வாடகை பிரச்சனை மனுக்கள் (7), நிலுவையில் உள்ள திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் (6), நில அபகரிப்பு வழக்குகள் (7) மனுக்கள், ஆவணங்கள் தொலைந்துபோன மனுக்கள் (3) மற்றும் 9 பல்வேறு வகையான மனுக்கள் இந்த முகாமில் பெறப்பட்டன.

இந்த முகாமின் சிறப்பு அம்சங்கள் :
மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று அவர்கள் கூறியுள்ள குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூத்த குடிமக்கள் கொடுத்த மனுக்கள் (9) மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்க கோரினாலும், அந்த மனுக்களையும் காவல் துறையினர் விசாரித்து தீர்வு காண முயற்சி செய்வார்கள்.
தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மூத்த குடிமக்கள் அவர்களுக்கான அவசர எண்.14567-ஐ தொடர்பு கொள்ளும்போது, அவர்களது தேவையறிந்து காவல் துறையினர் அவர்களை அணுகி தக்க பாதுகாப்பு வழங்குவார்கள்.

மூத்த குடிமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமானது இனி மாதந்தோறும் நடைபெறும்.
இம்முகாமில், திருச்சி மாநகர தெற்கு காவல் துணை ஆணையர், காவல் சரக உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், சட்டம் & ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

இதேபோன்று, திருச்சி மாநகர காவல்துறை சார்பாக சிறப்பு பெட்டிசன் மேளா நடத்தப்பட்டு பெறப்படும் புகார் மனுக்கள் மீது துரிதமாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர்M.சத்யபிரியாIPS அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.

Leave A Reply

Your email address will not be published.